Saturday, November 29, 2008

காட்டாமணக்கு - 2

மாற்று அடுக்கு வகையில் அமைந்த கைவடிவ இலைகளையும் கருஞ்சிவப்பு நிறத்துளிர்களையும் செந்நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி வகை காட்டாமணக்கு.

இதன் காய் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும். விதையும் ஆமணக்கு விதை போலவே சிறிய வடிவில் இருக்கும். இலை, பால், பட்டை, எண்ணெய் மருத்துவ குணம் உடையது.

இலை தாய்ப்பாலையும், உமிழ்நீரையும் பெருக்கும். பால் இரத்தக் கசிவை நிறுத்தும்.
சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: ஆதாளை, எலியாமணக்கு, எண்டி காட்டு தோட்டை, பஞ்சமுதம், தன்னாத்திரன், தந்தி சிந்திர மூலகம், கனலை, பூனையாமரி, பூம்பச்சரி, காட்டாமணக்கு, வெள்ளைக்காட்டாமணக்கு, கடலாமணக்கு, ஆதளை.

ஆங்கிலத்தில் : jatrophor curcas, linn; Euphorbiaceae.

மருத்துவ குணங்கள்:

காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டத் தாய்ப்பால் சுரக்கும். இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து வெந்த இலைகளை மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிகள் மீது கட்டிவர, கட்டிகள் கரையும். வலி குறையும்.

அதன் இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி, பல் ஆட்டம், இரத்தம் வருவது நிற்கும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து வெளிப்பூச்சாகப் பூச புண், சிரங்கு ஆறும்.

அதன் பாலை வாயில் கொப்பளிக்க வாய்ப்புண் உடனே ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை தொடர்ந்து குடுத்து வர பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுக் கட்டி, பெரு வயிறு, குட்டம் குணமாகும்.

அதன் முத்துப் பருப்பை மிதமாக எடுத்துப் பால்விட்டு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கொடுக்க பேதியாகும். (சில உடம்புகளுக்கு ஆகாது.)

காட்டாமணக்கு வேரைப் பாலில் அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலும் கலந்து 2 வேளை குடித்து வர பாண்டு, சோகை, காமாலை, வீக்கம் குணமாகும்.

காட்டாமணக்கின் கொழுந்தை பால்விட்டு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் காலையில் மட்டும் தொடர்ந்து குடித்துவர வெள்ளைபடுதல், சிரங்குகள், கட்டிகள் குணமாகும்.

காட்டாமணக்கு வேரின் பட்டையை அரைத்து கீல் வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.

காட்டாமணக்கின் வேர்ப் பட்டையை அரைத்து சுண்டைக் காயளவு எடுத்து அத்துடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்கச் செரியாமை, பெருங்கழிச்சல் குணமாகும்.

0 Responses: