Wednesday, September 23, 2009

எனக்குப் போராட்டம் பிடிக்கும்! - தோழர் தியாகு

தோழர் தியாகு குறித்து எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது தெரியவந்தது. அவர் திலீபன் மன்றம், தமிழ்ப் பள்ளி போன்றவை அப்பொழுது தொடங்கினார். அன்று வரை இன்று வரைக்கும் பல்வேறு போராட்டங்களை தோழர் நடத்தி வந்திருக்கிறார். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டமாகவே இருந்திருக்கிறது.

தோழர் தியாகு, ஆனந்த விகடனில் எழுதியுள்ள கட்டுரையை வாசித்தேன். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன ? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு அவரின் கட்டுரையை ஒரு தெளிவினை கொடுக்கிறது.

தொடர்ச்சியாக போராட வேண்டும். அதற்கு அந்த வழி சரியானதோ அதனை பின்பற்ற வேண்டும்.

ஆனந்த விகடன் இதழுக்கு நன்றியுடன், தோழரின் கட்டுரையை இங்கே கொடுக்கிறேன்.

எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார
வர்க்கத்தை அச்சுறுத்துபவை!

''நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். 'போராட்டமே வாழ்க்கையாச்சு நீரோட்டம் போல...' என்ற பாட்டைப் போல என்னுடைய பாடும் ஆகிப்போனதற்குக் காரணம், கோபங்கள்தான். சுதந்திர மனிதனைச் சுண்டவைக்கும் அத்தனை நெருக்கடிகளையும் நான் எதிர்க்கிறேன். அடங்க மறுக்கிறேன். விடுதலை என்ற மாற்றைத் தவிர எந்தச் சமாதானத்தையும் நான் ஏற்கவில்லை. எனவே போராடுகிறேன்.

படிக்கிற காலத்தில் ஏற்பட்டது இந்தக் குணம். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படித்த காலத்தில் காங்கிரஸ்காரன் நான். காமராஜர் தொடங்கிய தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழுவில் நானும் இருந்தேன். சோசலிஸப் பயிற்சி முகாம் நடத்தி னோம். அப்போது காங்கிரஸில் இருந்த நிலச்சுவான் தார்களான பூண்டி வாண்டையார், மூப்பனார் போன்றவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டோம். 'நிலச் சீர்திருத்தம்தான் வந்துவிட்டதே' என்று சி.சுப்பிரமணியம் கேட்டார். 'ஆனால், பினாமிகள் பெயர்களில் நிலங்களை மாற்றித் தப்பிக்கொண்டு விட்டார்களே' என்று நானும் என் தோழன் டி.என்.கோபாலனும் கேட்டோம். வாக்குவாதம் வந்தது. கோபித்துக்கொண்டு வெளியே போய் விட்டார் சி.சுப்பிரமணியம். இதைத் தொடர்ந்து '10 அம்சத் திட்டம்' என்ற புத்தகம் எழுதி வெளி யிட்டேன். இதில் கம்யூனிஸ வாடை அதிகம் வீசுவதாக காமராஜரிடம் புகார் செய்தார்கள்.படித்துப் பார்த்த அவர் 'நான் எழுதியது சரிதான்' என்று தீர்ப்பளித்தார். அடுத்த சில நாட்களில் நடந்த இன்னொரு கூட்டத்தில் துளசி வாண் டையாரை, 'நண்பர் துளசி அவர்களே' என்று அழைத்தேன். இப்படியே அதிக நாட்கள் சண்டை போட முடியவில்லை. காங்கிரஸில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐக்கியமானேன்.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அமைப்பு நிலச் சுவான்தார்களை அழிக்கும் போராட்ட முறையைக் கையில் எடுத்தது. வர்க்க எதிரியை அழித்தொழிக்கும் வேலை எனக்கு தரப்பட்டதால் வீட்டைவிட்டு வெளியேறினேன். கொலை வழக்கில் கைதாகி 1970 செப்டம்பரில் சிறைக்குப் போய்விட்டேன். அதற்கு பிறகுதான் உண்மையான போராட்டங்கள் ஆரம்பமானது. இன்றைக்கு சிறைக் கைதிகள் அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள் நாங்கள் அந்தக் காலத்தில் போராடி வாங்கியவை. படிக்கப் புத்தகங்கள் கேட்டு, கழிப்பறை வசதி கேட்டு, உணவில் சரியான அளவு வேண்டும் என்று சொல்லி வாரம்தோறும் ஏதாவது போராட்டம் நடத்துவோம். ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன், கைதிகளுக்காக 'சிறைக் கைதிகள் நல உரிமைச் சங்கம்' ஆரம்பித்தார். ஒரு கட்டு பீடியும், 50 பைசாவும்தான் சந்தா. சிறையில் எனக்கு இது தேவை என்று கோரிக்கைவைக்கலாம். ஆனால், எங்களுக்கு இது வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால், அதையும் சர்வசாதாரணமான விஷயமாக மாற்றினோம். 'சுதந்திரத் தாகம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையும் சிறைக்குள் நடத்தினோம்.

இதன் உச்சகட்டமாக 50 அம்சக் கோரிக்கைகளைத் தயார் செய்து ஒருநாள் காலையில் அனைவர் கையிலும் கொடுத்து வாசிக்கவைத்தோம். அவை டைப் அடிக்கப்பட்ட பிரதிகள். இது எப்படி வந்தது என்று அலறியது சிறை.

சிறைக் கைதி செத்தால் காக்கா செத்தது மாதிரி என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். ஆனால், கைதி செத்தால் கமிஷன் வரும் என்று தனது போராட்டங்களின் மூலமாக நிரூபித்துக்காட்டினார் என்னுடைய தோழன் லெனின். சிறைக் கைதிகளுக்கு இப்படி எத்தனையோ உரிமைகளை போராடி வாங்கித் தந்த நான் 14 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனேன். உள்ளுக்குள் இருக் கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இணைந்துவிட்டேன்.

ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையை அக்கட்சி சரியாக அணுகவில்லை. அதை என்னால் ஏற்க முடியவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை விஷயமான தேசிய இனப் பிரச்னையில் கட்சி நழுவி வருவதாக நினைத்தேன். தோழர் சந்துருவும் (இப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி) இதே எண்ணத்துடன் கட்சியுடன் முரண் பட்டார். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்கள். எங்களது வாதங்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் ஏற்கவும் முடியவில்லை. கடைசியில் வெளி யேறினேன். திலீபன் மன்றம் ஆரம்பித்தேன். 18 ஆண்டுகளாக தமிழ்த் தேசியம், தாய் வழிக் கல்வி, தனித் தமிழீழம், மனித உரிமை எனப் பல்வேறு நோக்கங்களுக்காகப் போராடி வருகிறேன்.

எதை எடுத்தாலும் எதிர்ப்பவர்கள் என்று போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்துவார்கள். 'இவங்களுக்கு வேற வேலை இல்லைப்பா. சும்மா சும்மா கோஷம் போடுவாங்க' என்று கிண்டல் அடிப்பார்கள். இவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். மொழி, பண்பாடு, ஒழுக்கம், அறம் எல்லாவற்றையும்விட முக்கியமானது பணம் என்று இன்று கற்பிக்கப்படுகிறது. போட்டிகள் நிறைந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட சுயநல ஊசிகள் தன்னம்பிக்கை உணர்ச்சிகளாக மனித உடல்களில் ஏற்றப்படுகின்றன. லாட்டரியில் பணம் விழுவது சிலருக்குத்தான். ஆனால், லட்சக்கணக்கானவர்களுக்கு லாட்டரி ஆசை திணிக்கப்படுகிறது. சீட்டு விளையாட்டில் வெற்றி பெறுபவன் ஒருவன்தான். ஆனால், பலரும் கடன் வாங்கி பெட் கட்டுகிறார்கள். இப்படிப்பட்ட சூது மனநிலையே இன்றைய தட்பவெப்ப நிலையாக ஆகிவிட்டது. இங்கு போராட்டக்காரர்கள் எப்படி வர முடியும்?

'அக்னிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..?' என்று கேட்டவன் பாரதி. அப்படிப்பட்ட அக்னிக் குஞ்சுகள் குறைந்து வருவதற்கு என்ன காரணம்? அதை உருவாக்க வேண்டிய இயக்கங்கள் தங்களது உயிரோட்டங்களைத் தொலைத்துவிட்டதுதான். பொருளாதாரவாதம் பேசிக்கொண்டே தேர்தலைக் குறிவைக்கும் அமைப்புகளாக இடதுசாரிக் கட்சிகள் தேய்ந்துவிட்டன. தலைவர்களை மட்டும் பூஜிக்கும் கட்சியாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறிவிட்டன. மாற்று அமைப்புகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மார்க்சிய, லெனினியக் குழுக்கள் செயலற்ற தீவிரவாதங்களைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மூன்றுமே மக்களது போராட்ட உணர்வுகளுக்குத் தூண்டுதலாக இல்லை.

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம்... இவைஉண்டு, தானுண்டு என்று இருப்பது சுகம்தான். ஆனால், அறம் ஆகாது. அடுத்த வீட்டில் அழுகைச் சத்தம் கேட்கும்போது அது நம்மைப் பாதிக்கவில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போகிறோம் என்று அர்த்தம். 'சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்கிலார்' என்று இதைத்தான் சொன்னான் பாரதி. நாளை இது உனக்கே நடக்கும்போது மற்றவர்களும் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். போராட்டம் என்பது ஆயுதம் தாங்குவது அல்ல. அனைவரும் ரோட்டில் நிற்பதும் அல்ல. அவரவர் எதிர்ப்பை ஏதாவது ஒரு வகையில் காண்பிப்பது. '30 கோடிப் பேரும் சேர்ந்து மூச்சுவிட்டால் போதும்... அது வெள்ளையனை அவனது நாட்டுக்கு விரட்டிவிடும்' என்று வ.உ.சி. சொன்னது மாதிரி ஏதாவது ஒருவகையில் முடிந்தவரை போராடலாம். 'மக்கள் தங்களது சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்தால் ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை வெறும் கையால் திருப்புவார்கள்' என்று சொன்னான் ஃபிடெல் காஸ்ட்ரோ.

போராட்டங்கள்தான் எல்லாக் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. கோபமான பிள்ளைக்கு சோறு கொஞ்சம் சீக்கிர மாகவே கிடைக்கும்!

வரலாறு இப்படிப்பட்ட போராட்டக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அடிமை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர் குறித்து யாரும் ஆராய்ச்சிகள் செய்வது இல்லை. போராடி வென்றவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களால் நூலகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்தப் போராட்டக்காரர் வரிசையில் இணைத்துக்கொள்ளவே நானும்போரா டுகிறேன். நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன. நீங்களும் வாருங்கள்!''


Monday, September 21, 2009

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்

பார்ப்பனீயம் என்ற சொல்லாடல் குறிப்பிட்ட ஒரு சாதியினரை மட்டும் குறிப்பதற்காவே வலைப்பதிவு எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரையும் படிக்காது, இந்துத்துவாவையும் உணராத அரைவேக்காட்டு விசிலடிச்சான் குஞ்சுகளாகவே பல வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அதனால் விளையும் பிரச்சனை என்னவென்றால் நாம் இந்த பார்ப்பனீயம் என்ற சொல்லடாலை கவனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் என்றால் உடனே சாதியை சொல்லி திட்டுகிறார்கள் என அழ தொடங்கி விடுகிறார்கள். சாதி ரீதியிலான தாக்குதல்களை நாம் விரும்புவதில்லை. தனிமனித தாக்குதல்களையும் நாம் நிராகரிக்கிறோம். கருத்துக்களை, கருத்து ரீதியிலாக மோதமே நாம் விரும்புகிறோம். ஆனால் அவ்வாறு மோதுவதற்கான இடமாக வலைப்பதிவுகள் இல்லாத பரிதாப சூழலையே நாம் உணர்கிறோம்.

குறிப்பிட்ட சாதியினரை தொடர்ந்து தாக்கி கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எந்த நன்மையும் நமக்கு இல்லை. இன்றைக்கு பிராமண சாதியில் பிறக்காமல் பார்ப்பனீயவாதிகளாக திரிந்து கொண்டிருப்போரே அதிகம். உதாரணத்திற்கு நம்முடைய நண்பர் இளா போல. நண்பர் மன்னிக்க வேண்டும். இன்றைக்கு அவரது பதிவு தான் சரியான உதாரணமாக கண்ணில் பட்டது. பொதுவாகவே வலைப்பதிவுகளில் பெரும்பான்மையோர் அத்தகைய நிலையிலேயே உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகளான இவர்கள் ஒரு புறம் இருக்க, பிறப்பால் பார்ப்பன சாதியில் பிறந்த பொழுதும் பார்ப்பனீயத்தை கடுமையாக எதிர்க்கும் எத்தனையோ நண்பர்களை சிற்றிதழ் குழுமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தலித், முஸ்லீம் மக்களுக்காகவும் போராடும் இந்த நண்பர்கள் இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். மகஇக அமைப்பிலும் பல தோழர்கள் அவ்வாறு உள்ளனர்.

எனவே நாம் எதிர்ப்பது தனிப்பட்ட பிராமண சாதியில் பிறந்தவர்களை அல்ல. பார்ப்பனீய சிந்தனை (Brahmanism) கொண்டவர்களையே நாம் எதிர்க்கிறோம். இந்து சனாதானத்தை நிலை நிறுத்தும் இந்துத்துவா வெறியர்களையும் அடிப்படைவாதிகளையுமே நாம் எதிர்க்கிறோம். அவர்கள் எந்த சாதியை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் எதிர்க்கவே செய்வோம். அந்த வகையிலேயே நாம் கமலின் உன்னைப் போல ஒருவன் படத்தையும் எதிர்க்க முனைகிறோம். அதற்கு வக்காலத்து வாங்கும் இளா போன்ற விவசாய நண்பர்களையும் எதிர்க்கிறோம். நம் விவசாய நண்பரும் ஒரு பார்ப்பனீயவாதியே ஆவார்.

இந்த திரைப்படம் எவ்வாறு முஸ்லீம்களை எதிர்க்கிறது என்பதை நான் விளக்கியிருந்தேன். பெஸ்ட் பேக்கரியில் நடந்த கோரத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் போக்கு பற்றி எழுதியிருந்தது பற்றி எவரிடம் இருந்தும் சரியான விளக்கம் இல்லை. ஆனால் உடனே கமல் பிறப்பால் பிராமணர். எனவே அவரை தாக்குகிறார்கள் என திசை திருப்பும் போக்கில் சிலர் எழுத தொடங்கி விட்டார்கள்.

கமல் பஞ்சதந்திரம் போலவோ, மைக்கேல் மதன காமராஜன் போலவோ படம் எடுத்து இருந்தால், அதில் எத்தனை விதமான பார்ப்பனீயத்தனங்களை புகுத்தி இருந்தாலும் நாம் கேள்வி கேட்க போவதில்லை. ஏனென்றல் அத்தகைய குப்பைகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. தொலைக்காட்சில் அதை விட மோசமான குப்பைகள் நாம் வீட்டிற்கே தினமும் வந்து சேருகிறது.

ஆனால் சமூக நோக்குள்ள படம், வெகுஜன மக்களின் மனசாட்சி, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தும் படம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பொழுது தான் நாம் கேள்வி கேட்க நேரிடுகிறது.

அப்படி கேள்வி கேட்டால் எப்படியான பதில்கள் கிடைக்கும் என்பதற்கு என் கடந்த பதிவுக்கு வந்த மறுமொழிகளும், சுகுணா பதிவுக்கு வந்த மறுமொழிகளுமே சாட்சிகளாக உள்ளது. குறைந்தபட்ச நேர்மையுடன் கூட விவாதிக்க திரணியற்றவர்கள் தான் அனானி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் திசைதிருப்பும் போக்குகளில் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளை பல நண்பர்கள் மாற்று ஊடகம் என்று சொல்கிறார்கள். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

Sunday, September 20, 2009

கமலின் இந்திய தேசிய சாக்கடை : உன்னைப் போல் ஒருவன்

வட இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க, தமிழகத்திலே மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என அங்கலாயிக்கும் இரா.முருகன் என்ற பார்ப்பனீய பண்ணாடையின் வசனத்தில் உருவான இந்த சாக்கடைக்கு தான் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி தள்ளுகிறார்கள் நம் தமிழ் வலைப்பதிவர்கள். அப்பட்டமாக முஸ்லீம் எதிர்ப்பு வாதத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்துக்கு இது வரை சிறு சலசலப்பும் வராமல் இருப்பதே ஆச்சரியமாக உள்ளது. முஸ்லீம் எதிர்ப்ப்பை திறமையாக மறைக்க சாமானிய மக்களின் மனசாட்சியை கொண்டு வருகிறார்களாம். சாமானிய மக்களின் மனசாட்சி தீவிரவாதத்திற்கு எதிராக உள்ளதாம். ஆனால் அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற இந்திய பார்ப்பனீய வர்க்கம் பற்றி இந்தப் படத்தில் எந்த விமர்சனமும் இல்லை. பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதித் தள்ளுகிற வலைப்பதிவு எழுத்தாள சிங்கங்களுக்கும் எந்த விமர்சனமும் இல்லை.

படத்தின் கதை ஒரு சாமானிய மனிதன் தீவிரவாதத்திற்கு எதிராக கிளம்பி தீவிரவாதிகளை கொல்கிறானாம். ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக அவன் கடைப்பிடிப்பதும் தீவிரவாதம். அதையே தானே தீவிரவாதிகளும் செய்கிறார்கள் ? இந்தியா என்ன கைசூப்பிக் கொண்டா உட்கார்ந்து இருக்கிறது. 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட இந்த இந்தியா காரணம் தானே ? அதனை எதிர்க்க இந்தியாவை தாக்கினால் தீவிரவாதம். ஆனால் இந்தியா செய்து கொண்டிருப்பது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் தந்திரம்.
மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான மேற்கு வங்க பழங்குடி மக்கள் மீது அரசு தொடுத்த தாக்குதல் அது உள்நாட்டு பாதுகாப்பு. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடினால் தீவிரவாதம்.

குஜராத்தில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் போராடினால் தீவிரவாதம். ஆனால் அந்த அரசாங்கம் முஸ்லீம் மக்களை வேட்டையாடினால் - தேசபக்தி, பாதுகாப்பு.

இந்த தத்துவத்தை தான் இந்த மண்ணாங்கட்டி படம் நிலை நிறுத்துகிறது.

இந்தப் படத்தில் வரும் முஸ்லீம் எதிர்ப்பு வாதத்திற்கு ஒரு சாம்பிள்

குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் பல முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சியை விவரிக்கும் இடம் நகைச்சுவை காட்சியாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது. முஸ்லீம் தீவிரவாதி சொல்கிறார். அவருக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி அழகாக இருப்பாராம். அந்த மனைவி பெஸ்ட் பேக்கரியில் கருகி இறந்து விட்டாராம். அதனை அவர் விவரிக்கும் பொழுது மற்றொரு தீவிரவாதியான சந்தானபாரதி ஜோக் அடிப்பார் - அதான் இன்னும் இரண்டு இருக்கே, போததா என ?

அதாவது முஸ்லீம்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் இடம் கூட நகைச்சுவையாக மாறி விடுகிறது.

அது போல அப்பட்டமான போலீஸ் வன்முறையை சித்திரிக்கும் இடமாக ஒரு கைதியை சித்திரவதை செய்ய ஒரு போலீஸ் வருகிறார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கைதி பயத்தில் மூத்திரம் பெய்கிறார். உடனே தியேட்டரில் சிரிப்பு அலை. ஒரு கைதி சித்திரவதை செய்யப்படுவதை கூட நகைச்சுவையாக்கும் செயல்.

துரத்திச் செல்லப்பட்ட மற்றொரு முஸ்லீம் தீவிரவாதி லாரியில் அடிபட, அடி பட்டு உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அவனிடம் வாக்குமூலம் வாங்கும் அருவருப்பான காட்சி...

இப்படி படம் முழுக்க அப்பட்டமான மனித உரிமை மீறும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் நிறைந்து இருக்கின்றன. ஆனால் இங்கு விமர்சனம் எழுதும் தமிழ் வலைப்பதிவு ஜென்மங்களுக்கு இந்த எந்தக் காட்சிகளும் பெரிதாக தெரியவில்லை. படம் எடுக்கப்பட்ட விதத்தை சிலாகித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் யார் ? அவர்களை உருவாக்குபவர்கள் யார் ?

அவர்களை உருவாக்குபவர்கள் இந்த அரசாங்கம் இல்லாமல் வேறு யார் ? தினந்தோறும் அரசாங்கம் தொடுத்து வரும் வன்முறையை அனுபவிக்கும் ஒருவன் தான் தீவிரவாதியாக உருவாகிறான். குஜராத்திலும், மும்பையிலும், டெல்லியிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமா காரணம் ? அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது இந்திய பார்ப்பனீய வர்க்கம். தீவிரவாதத்திற்கான காரணத்தை களையாமல் தீவிரவாதிகளை குன்று குவிக்க சிபாரிசு செய்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய வசனம் - தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார்.

இரா.முருகன் அவர்களே, 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அப்ப என்ன சிரைத்து கொண்டிருந்தீர்களா ?

Tuesday, February 3, 2009

தமிழர் எழுச்சி - மாமாக்களும், மாமிகளும் அலறுவது ஏன் ?

1. முத்துக்குமாரின் வீர மரணத்திற்கு பிறகு மாமாக்களும், மாமிகளும் அலறிக்கொண்டு இருப்பது தெரிகிறது. முத்துக்குமாரின் மரணம் அடங்கி இருந்த தமிழர்களின் இன உணர்வை வெளிப்படுத்தி விட்டது. அதனால் மாமக்களுக்கும், மாமிகளுக்கும் கிலி பிடித்து விட்டது

2. இன்றைய 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்களுக்கு இன உணர்வு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகான நாட்களில் உலக நடப்பை காண தொடங்கிய இந்த தலைமுறையினருக்கு எந்தளவுக்கு மொழிப் பற்றும், இனப்பற்றும் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான சமுதாயத்தை நாம் கொண்டு இருக்கிறோமோ என்ற அச்சம் இருந்தது.

ஆனால் இன்று அந்தக் கவலைகள் எல்லாம் பறந்து போய் விட்டது. 1965ல் இருந்ததை விட மிக அதிகமான இன உணர்வு தற்பொழுது தென்படுவதாக சென்னையில் இருக்கும் என் மாமா தெரிவித்தார்.

3. மதுரையில் இந்திய தேசியக் கொடியை எரித்து இருக்கிறார்கள். முதன் முறையாக தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு கூட அதிர்ச்சி தான்.




4. முத்துக்குமாரை தொடர்ந்து மறைந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இறுதி ஊர்வலத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ் இன உணர்வு பரவட்டும். ஆனால் தீக்குளிப்புகளும், தற்கொலைகளும் வேண்டாம்.

5. அருமைத் தம்பி முத்துக்குமார் தற்கொலை மட்டும் செய்து கொள்ள வில்லை. அவரது பேனாவையும் பேச வைத்து விட்டு தான் மறைந்தார். இன்று பேசிக் கொண்டிருப்பது அவரது தீக்குளிப்பு அல்ல. அவரது எழுத்து தான் இன்று பேசிக் கொண்டிருக்கிறது.

6. அவருடைய அந்த எழுத்து தான் மாமாக்களையும், மாமிகளையும் எரிச்சல்படுத்தியிருக்கிறது. தெளிவாக ஒரு சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டானே இந்த இளைஞன் என எரிச்சல் படுகிறார்கள். அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவது போல உணர்ச்சிவசப்பட்டு இறந்து விட்டான் என்கிறார்கள்.

7. அருமைத் தம்பி முத்துக்குமார் உணர்ச்சிவசப்படவில்லை. தெளிவாக சிந்தித்தான். அவனுடைய மரணம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தான். அதற்கு வேண்டிய காரியங்களை நிதானமாக செயல்படுத்தி இருக்கிறான். அவன் தற்கொலையை உணர்ச்சிபூர்வமாக அணுகவில்லை. தற்கொலையை ஆயுதமாக கையில் ஏந்தினான். அந்த ஆயுதம் தான் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களை தூக்கம் இல்லாமல் செய்திருக்கிறது. அரசியல்வாதிகளையும், கூடவே மாமாக்களையும், மாமிகளையும் நிம்மதி இல்லாமல் செய்திருக்கிறது.

8.முத்துக்குமாரின் தியாகத்தை கொச்சைப்படுத்த எளிமையான வழி, அவன் உணர்ச்சிவசப்பட்டு விட்டான் என்பது. உணர்ச்சிவசப்படுபவன் பல மணி நேரங்கள் செலவு செய்து தீர்க்கமான மரண சாசனம் எழுத மாட்டான். உடல் முழுவதும் எரிந்து போன நேரத்திலும், இறுதி மூச்சிலும் என்னுடைய சாதி தமிழ்ச்சாதி என கூற மாட்டான். தன்னுடைய உடலின் வலியை கூட அவன் எங்கேயும் காட்டியதாக படிக்கவில்லை. அவன் அழுது அரற்றியதாக படிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பற்றுங்கள் என்று கொள்கை முழுக்கமாகத் தான் அவன் கத்தி இருக்கிறான்.

அருமைத்தம்பியின் தியாகத்தை உணர்ச்சிமயமாகியது என கொச்சைப்படுத்தாதீர்கள். அவன் ஒரு புதிய வகை ஆயுதம் ஏந்தி இருக்கிறான்.

9.மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சில மாமாக்கள் பதிவு எழுதி கொண்டிருக்கிறார்கள். இதை எய்ம்ஸ் இடஒதுக்கீடு போராட்டத்தின் பொழுது இவர்கள் தெரிவித்தார்களா ? மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள் என்றல்லவா ஊடகங்கள் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்தன. இப்பொழுது மாணவர்கள் படிக்க வேண்டுமாம்.

10. நல்ல காமெடி மாமா. எங்கள் மாணவர்கள் படிக்கவும் செய்வார்கள். உங்களை படிய வைக்கவும் செய்வார்கள்.

Saturday, January 31, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் இன்று தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் தொகுப்பு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெற்றது

தமிழன் தொலைக்காட்சி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்புச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

முத்துக்குமார் இறுதி அறிக்கை - வீடியோ வடிவில்

வீடியோ வடிவில் தியாகி முத்துக்குமாரின் இறுதி அறிக்கை You Tubeல் உள்ளது. இதை வலையேற்றியவருக்கு நன்றி. பலரிடம் முத்துக்குமாரின் செய்தியை கொண்டு செல்ல வீடியோ ஒரு எளிய வடிவம்.

Friday, January 30, 2009

முத்துக்குமாருக்கு வீரவணக்கம்

முத்துக்குமாருக்கு வீரவணக்கம். அவருடைய விருப்பப்படியே என்னால் முந்தளவுக்கு அவரது மரண சாசனத்தை நகலெடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப் போகிறேன்



விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Sunday, January 25, 2009

ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது

பார்ப்பனியத்திற்கு அடிபணிந்து சேவகம் செய்பவர்களுக்கு விருதுகள் அள்ளி வழங்கப்படும். அந்த வகையில் ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. அதனை ஜெயகாந்தன் என்னும் நாய் நக்கி கொள்ளட்டும்

ஜெயகாந்தனின் நாய் பேச்சினை இந்த விருது பெறும் நேரத்தில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’




சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய் ? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே ?

அது மட்டும் அல்ல, வர்ணாசிரம வேறுபாடுகள் இருக்க வேண்டுமாம். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமாம் ? ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ மலம் அள்ள வேண்டியது தானே ? மலம் அள்ளி இருந்தால் இப்படி கூறியிருப்பாயா ?

இந்த நேரத்தில் சிலர் அந்த விருதுக்கே கொளரம் கிடைத்து விட்டதாக கூறுவார்கள். இந்தி நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் தான் கிடைத்துள்ளது இந்த அல்ப விருது. இந்த அல்ப விருது  பார்ப்பனியத்திற்கு கூஜா தூக்குபவர்களுக்காக வழங்கப்படும் விருது தானே தவிர, திறமைக்கான விருது அல்ல.

பின் குறிப்பு : ஜெயகாந்தனை நாய் என எழுத வேண்டுமா, இது தரக்குறைவான சொல் அல்லவா என யோசித்தேன். ஆனால் தமிழறிஞர்களை நாயுடன் ஒப்பிட்ட ஜெயகாந்தனை நாய் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதே. அவர் எழுதிய படைப்புகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவரின் தனிப்பட்ட இயல்புகள் கொண்டாடக்கூடியதாக இல்லை.

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?

அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.

அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.

தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...

Monday, January 19, 2009

தமிழ் சினிமா, பூ, பெண்கள், கமல்ஹாசன், சினிமா அயோக்கியத்தனம்

1. தமிழ் சினிமாவில் பெண்கள் எப்பொழுதும் போகப் பொருளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர். கதாநாயகனை காதல் செய்வதும், மரத்தைச் சுற்றி பாடுவதும், கண்ணை கசக்கி கொண்டு கதாநாயகனிடம் அடிபடுவதும், முத்தம் பெறுவதும் தான் பெரும்பாலான பெண்களின், கதாநாயகிகளின் பணியாக இருந்து வந்திருக்கிறது. ஒரு சில படங்களை தவிர பெரும்பாலும் இப்படியான படங்களையே தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது.

பெரும்பாலான படங்கள் இப்படி உள்ள நிலையில் பெண்ணின் காதலை கவிதை போன்று ஏதேனும் திரைப்படம் கூறியிருக்கிறதா என யோசித்து பார்த்தேன். எந்தப் படமும் நினைவில் வரவில்லை. காதல் என்றாலே அது ஆணின் மன உணர்ச்சி, சோகம், பெண்ணை நம்பாதே போன்ற அறிவுரைகள், தாடி வைத்துக் கொண்டு திரியும் ஆண், பெண்கள் என்றாலே காதல் தோல்வியை ஏற்படுத்துபவர்கள் என்ற சித்தரிப்பே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் காதலை சொல்லிய படங்கள் மிகவும் குறைவு. அந்த காதலின் பல்வேறு பரிமாணங்களை படம் முழுவதும் கட்டிய படங்கள் அதை விடவும் குறைவு.

2. இவ்வளவு பீடிகையுடன் எந்தப் படத்தை விளக்குகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அந்தப் படம் "பூ". இதனை நேற்று தான் பார்த்தேன். மாரி என்ற பெண்ணின் காதலை மிக அழகாக, ஒரு கவிதை போல இயக்குனர் படைத்திருக்கிறார். மாரியின் காதல், அவளின் தவிப்பு, அவளின் நேசம் போன்றவையெல்லாம் மிக அழகாக படத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர்.



3.தங்கர்பச்சன் அழகாக எடுத்த அழகி திரைப்படத்துடன் பூ திரைப்படம் ஓரளவுக்கு பொருந்தி வருகிறது. அழகி ஒரு ஆண் தன் பழைய காதலி குறித்த எண்ணங்களாக விரியும் பொழுது பூ ஒரு பெண்ணின் காதலை விவரிக்கிறது. அழகி பேசப்பட்ட அளவுக்கு பூ திரைப்படம் மக்கள் மத்தியில் பேசப்படாதது விந்தையாக உள்ளது. பெண்ணை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம் அதனால் பேசப்படவில்லை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அதுவல்ல காரணம். சாதாரண கிராமத்து பெண்ணைக் குறித்து பேசியது காரணமாக இருக்கக்கூடும்.

4.நகரத்து நவ நாகரிக பெண்ணின் காதல் கவர்ச்சியை மையப்படுத்தி படம் வந்திருந்தால் பத்திரிக்கைகளில் விளம்பரம் கிடைத்திருக்கும். மட்டமான "வாரணம் ஆயிரம்" திரைப்படத்திற்கு அப்படி தான் விளம்பரம் கிடைத்தது. தமிழ் வலைப்பதிவில் கூட அதனை அழகான புதினம் என்றெல்லாம் பலர் எழுதி இருந்தார்கள். ரசனை மாறுபடவே செய்கிறது. ஆனால் ரசிக்கப்படும் பார்வையில் இருக்கும் மேல் அடுக்கு, கீழ் அடுக்கு சமூக பார்வைகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.

5.ஏ செண்டர் படம், பி செண்டர் படம் என்ற சமூக அடுக்கு சார்ந்த விமர்சனங்களைக் கடந்து, இப்படியான ரசனையை தமிழ் சினிமா வியபாரிகள் உருவாக்குகிறார்கள் என்ற கருத்துடையவன் நான். தமிழ் சினிமா, சினிமா வியபார முதலாளிகளின் கைகளில் சிக்குண்டு தவிக்கிறது. தமிழ் சினிமா இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை இந்த முதலாளிகள் வகுக்கிறார்கள். இவர்களின் இந்த இலக்கணத்தை உடைக்க இங்கே பெரும்பாலானவர்களுக்கு தைரியம் இல்லை. அப்படி உடைக்கும் இயக்குனர்கள் கூட தங்களின் படங்களை முழுமையான மாற்று சினிமாகவோ அல்லது நல்ல சினிமாகவோ எடுக்க முயலுவதில்லை. சினிமா வியாபாரத்திற்கு கட்டுபட்டு தங்களின் சுய எண்ணங்களை சிதைத்துக் கொண்டே படத்தை படைக்கிறார்கள். தங்களை சிதைத்து கொள்ளுவதை கமர்ஷியலுக்கு செய்யும் தியாகமாகவும் சில இயக்குனர்கள் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் கமர்ஷியல் அதனால் தான் நடக்கிறதா என்ற கேள்விக்கு தங்களை இவர்கள் உட்படுத்திக் கொள்வதேயில்லை.

தங்கர்பச்சான் எடுத்த அழகி திரைப்படத்திலே "குருவி குடைந்த கொய்யாப்பழம்" ரெக்கார்ட் டான்ஸ் பாடலுக்கு அவசியம் என்ன நேர்ந்தது ? மொத்த படத்தையும் அது சிதைத்தது. ஆனால் கமர்ஷியல் வெற்றிக்கு அது தேவை என்பதாக சினிமா வியாபாரிகள் நம்புவது மட்டுமில்லாமல் பார்வையாளனையும் நம்பவைக்க முனைகிறார்கள்.

6.தமிழ் சினிமாவில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடந்து வருகின்றன. அதனையெல்லாம் பட்டியல் போட போவதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல படங்கள் இருந்தாலும் "உலக தரத்திற்கு சினிமா" என்னும் பொழுது கமல்ஹாசனை நோக்கி பார்க்கும் பார்வை மகா அயோக்கியத்தனம். கமல்ஹாசன் தன்னை தமிழ் சினிமாவில் நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு பிறகு கமல்ஹாசன் எடுத்த படங்களில் எத்தனை படங்கள் நல்ல படங்கள் என்று பார்த்தால் மகாநதி திரைப்படத்தை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. குணா உலக மகா குப்பை. அதனை சிறந்த சினிமா என்று பீற்றிக் கொண்டார். மரண தண்டனைக்கு எதிரான படம் விருமாண்டி என்று கூறிக்கொண்டு க்ளைமேக்ஸில் பசுபதியை கொன்றார். படத்தின் கருவையே கொச்சப்படுத்துகிறோம் என்று தெரியாத அறிவுஜீவி தான் "உலக நாயகன்" கமலஹாசன். கமலஹாசனின் படங்களுக்கு ரஜினி படங்களையே பார்த்து விசிலடித்துக் கொண்டு சென்று விடலாம்.

7.சிறுகதையாக வெளிவந்த கதையின் திரையாக்கம் தான் பூ என படித்திருந்தேன். சிறுகதை எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை. படம் அழகாக எடுக்கப்பட்டு இருந்தது. தன் காதலை சிறு வயதில் இருந்து தன் மனதில் வளர்த்து வரும் பெண்ணின் கதை தான் பூ. கதை ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. க்ளைமேக்ஸ் கூட அப்படி ஒன்றும் வித்யாசமாக எடுக்கப்படவில்லை. ஆனால் படம் சொல்லிய விதம் கவர்வதாக இருந்தது.

8. பள்ளிக்கூடத்தில் நீ யாராக விரும்கிறாய் என கேட்பதாக இருக்கட்டும், செல்பேசியின் எண்ணையை ஞாபகம் வைத்துக் கொள்வதாக இருக்கட்டும், பழம் பறித்துக் கொண்டு கொடுக்க ஓடுவதாக இருக்கட்டும் பல இடங்களில் சினிமாத்தனங்களை மறந்து படத்தை ரசிக்க முடிந்தது

9. கதாநாயகனுக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை. அது மகிழ்ச்சி அளித்த மாற்றம். கடைசியில் அழுது கொண்டே முடிவது விசனப்பட்ட வழக்கமான மசாலா

10. இறுதியாக இன்னும் கூட நல்ல விமர்சனம் எழுத வேண்டும் என்று ஆசை தான். அதிகாலை 3மணிக்கு தூக்கம் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் எழுதினால் இப்படி தான் எழுத முடியும் போல