Wednesday, September 23, 2009

எனக்குப் போராட்டம் பிடிக்கும்! - தோழர் தியாகு

தோழர் தியாகு குறித்து எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது தெரியவந்தது. அவர் திலீபன் மன்றம், தமிழ்ப் பள்ளி போன்றவை அப்பொழுது தொடங்கினார். அன்று வரை இன்று வரைக்கும் பல்வேறு போராட்டங்களை தோழர் நடத்தி வந்திருக்கிறார். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டமாகவே இருந்திருக்கிறது.

தோழர் தியாகு, ஆனந்த விகடனில் எழுதியுள்ள கட்டுரையை வாசித்தேன். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன ? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு அவரின் கட்டுரையை ஒரு தெளிவினை கொடுக்கிறது.

தொடர்ச்சியாக போராட வேண்டும். அதற்கு அந்த வழி சரியானதோ அதனை பின்பற்ற வேண்டும்.

ஆனந்த விகடன் இதழுக்கு நன்றியுடன், தோழரின் கட்டுரையை இங்கே கொடுக்கிறேன்.

எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார
வர்க்கத்தை அச்சுறுத்துபவை!

''நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். 'போராட்டமே வாழ்க்கையாச்சு நீரோட்டம் போல...' என்ற பாட்டைப் போல என்னுடைய பாடும் ஆகிப்போனதற்குக் காரணம், கோபங்கள்தான். சுதந்திர மனிதனைச் சுண்டவைக்கும் அத்தனை நெருக்கடிகளையும் நான் எதிர்க்கிறேன். அடங்க மறுக்கிறேன். விடுதலை என்ற மாற்றைத் தவிர எந்தச் சமாதானத்தையும் நான் ஏற்கவில்லை. எனவே போராடுகிறேன்.

படிக்கிற காலத்தில் ஏற்பட்டது இந்தக் குணம். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படித்த காலத்தில் காங்கிரஸ்காரன் நான். காமராஜர் தொடங்கிய தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழுவில் நானும் இருந்தேன். சோசலிஸப் பயிற்சி முகாம் நடத்தி னோம். அப்போது காங்கிரஸில் இருந்த நிலச்சுவான் தார்களான பூண்டி வாண்டையார், மூப்பனார் போன்றவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டோம். 'நிலச் சீர்திருத்தம்தான் வந்துவிட்டதே' என்று சி.சுப்பிரமணியம் கேட்டார். 'ஆனால், பினாமிகள் பெயர்களில் நிலங்களை மாற்றித் தப்பிக்கொண்டு விட்டார்களே' என்று நானும் என் தோழன் டி.என்.கோபாலனும் கேட்டோம். வாக்குவாதம் வந்தது. கோபித்துக்கொண்டு வெளியே போய் விட்டார் சி.சுப்பிரமணியம். இதைத் தொடர்ந்து '10 அம்சத் திட்டம்' என்ற புத்தகம் எழுதி வெளி யிட்டேன். இதில் கம்யூனிஸ வாடை அதிகம் வீசுவதாக காமராஜரிடம் புகார் செய்தார்கள்.படித்துப் பார்த்த அவர் 'நான் எழுதியது சரிதான்' என்று தீர்ப்பளித்தார். அடுத்த சில நாட்களில் நடந்த இன்னொரு கூட்டத்தில் துளசி வாண் டையாரை, 'நண்பர் துளசி அவர்களே' என்று அழைத்தேன். இப்படியே அதிக நாட்கள் சண்டை போட முடியவில்லை. காங்கிரஸில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐக்கியமானேன்.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அமைப்பு நிலச் சுவான்தார்களை அழிக்கும் போராட்ட முறையைக் கையில் எடுத்தது. வர்க்க எதிரியை அழித்தொழிக்கும் வேலை எனக்கு தரப்பட்டதால் வீட்டைவிட்டு வெளியேறினேன். கொலை வழக்கில் கைதாகி 1970 செப்டம்பரில் சிறைக்குப் போய்விட்டேன். அதற்கு பிறகுதான் உண்மையான போராட்டங்கள் ஆரம்பமானது. இன்றைக்கு சிறைக் கைதிகள் அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள் நாங்கள் அந்தக் காலத்தில் போராடி வாங்கியவை. படிக்கப் புத்தகங்கள் கேட்டு, கழிப்பறை வசதி கேட்டு, உணவில் சரியான அளவு வேண்டும் என்று சொல்லி வாரம்தோறும் ஏதாவது போராட்டம் நடத்துவோம். ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன், கைதிகளுக்காக 'சிறைக் கைதிகள் நல உரிமைச் சங்கம்' ஆரம்பித்தார். ஒரு கட்டு பீடியும், 50 பைசாவும்தான் சந்தா. சிறையில் எனக்கு இது தேவை என்று கோரிக்கைவைக்கலாம். ஆனால், எங்களுக்கு இது வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால், அதையும் சர்வசாதாரணமான விஷயமாக மாற்றினோம். 'சுதந்திரத் தாகம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையும் சிறைக்குள் நடத்தினோம்.

இதன் உச்சகட்டமாக 50 அம்சக் கோரிக்கைகளைத் தயார் செய்து ஒருநாள் காலையில் அனைவர் கையிலும் கொடுத்து வாசிக்கவைத்தோம். அவை டைப் அடிக்கப்பட்ட பிரதிகள். இது எப்படி வந்தது என்று அலறியது சிறை.

சிறைக் கைதி செத்தால் காக்கா செத்தது மாதிரி என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். ஆனால், கைதி செத்தால் கமிஷன் வரும் என்று தனது போராட்டங்களின் மூலமாக நிரூபித்துக்காட்டினார் என்னுடைய தோழன் லெனின். சிறைக் கைதிகளுக்கு இப்படி எத்தனையோ உரிமைகளை போராடி வாங்கித் தந்த நான் 14 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனேன். உள்ளுக்குள் இருக் கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இணைந்துவிட்டேன்.

ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையை அக்கட்சி சரியாக அணுகவில்லை. அதை என்னால் ஏற்க முடியவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை விஷயமான தேசிய இனப் பிரச்னையில் கட்சி நழுவி வருவதாக நினைத்தேன். தோழர் சந்துருவும் (இப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி) இதே எண்ணத்துடன் கட்சியுடன் முரண் பட்டார். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்கள். எங்களது வாதங்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் ஏற்கவும் முடியவில்லை. கடைசியில் வெளி யேறினேன். திலீபன் மன்றம் ஆரம்பித்தேன். 18 ஆண்டுகளாக தமிழ்த் தேசியம், தாய் வழிக் கல்வி, தனித் தமிழீழம், மனித உரிமை எனப் பல்வேறு நோக்கங்களுக்காகப் போராடி வருகிறேன்.

எதை எடுத்தாலும் எதிர்ப்பவர்கள் என்று போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்துவார்கள். 'இவங்களுக்கு வேற வேலை இல்லைப்பா. சும்மா சும்மா கோஷம் போடுவாங்க' என்று கிண்டல் அடிப்பார்கள். இவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். மொழி, பண்பாடு, ஒழுக்கம், அறம் எல்லாவற்றையும்விட முக்கியமானது பணம் என்று இன்று கற்பிக்கப்படுகிறது. போட்டிகள் நிறைந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட சுயநல ஊசிகள் தன்னம்பிக்கை உணர்ச்சிகளாக மனித உடல்களில் ஏற்றப்படுகின்றன. லாட்டரியில் பணம் விழுவது சிலருக்குத்தான். ஆனால், லட்சக்கணக்கானவர்களுக்கு லாட்டரி ஆசை திணிக்கப்படுகிறது. சீட்டு விளையாட்டில் வெற்றி பெறுபவன் ஒருவன்தான். ஆனால், பலரும் கடன் வாங்கி பெட் கட்டுகிறார்கள். இப்படிப்பட்ட சூது மனநிலையே இன்றைய தட்பவெப்ப நிலையாக ஆகிவிட்டது. இங்கு போராட்டக்காரர்கள் எப்படி வர முடியும்?

'அக்னிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..?' என்று கேட்டவன் பாரதி. அப்படிப்பட்ட அக்னிக் குஞ்சுகள் குறைந்து வருவதற்கு என்ன காரணம்? அதை உருவாக்க வேண்டிய இயக்கங்கள் தங்களது உயிரோட்டங்களைத் தொலைத்துவிட்டதுதான். பொருளாதாரவாதம் பேசிக்கொண்டே தேர்தலைக் குறிவைக்கும் அமைப்புகளாக இடதுசாரிக் கட்சிகள் தேய்ந்துவிட்டன. தலைவர்களை மட்டும் பூஜிக்கும் கட்சியாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறிவிட்டன. மாற்று அமைப்புகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மார்க்சிய, லெனினியக் குழுக்கள் செயலற்ற தீவிரவாதங்களைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மூன்றுமே மக்களது போராட்ட உணர்வுகளுக்குத் தூண்டுதலாக இல்லை.

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம்... இவைஉண்டு, தானுண்டு என்று இருப்பது சுகம்தான். ஆனால், அறம் ஆகாது. அடுத்த வீட்டில் அழுகைச் சத்தம் கேட்கும்போது அது நம்மைப் பாதிக்கவில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போகிறோம் என்று அர்த்தம். 'சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்கிலார்' என்று இதைத்தான் சொன்னான் பாரதி. நாளை இது உனக்கே நடக்கும்போது மற்றவர்களும் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். போராட்டம் என்பது ஆயுதம் தாங்குவது அல்ல. அனைவரும் ரோட்டில் நிற்பதும் அல்ல. அவரவர் எதிர்ப்பை ஏதாவது ஒரு வகையில் காண்பிப்பது. '30 கோடிப் பேரும் சேர்ந்து மூச்சுவிட்டால் போதும்... அது வெள்ளையனை அவனது நாட்டுக்கு விரட்டிவிடும்' என்று வ.உ.சி. சொன்னது மாதிரி ஏதாவது ஒருவகையில் முடிந்தவரை போராடலாம். 'மக்கள் தங்களது சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்தால் ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை வெறும் கையால் திருப்புவார்கள்' என்று சொன்னான் ஃபிடெல் காஸ்ட்ரோ.

போராட்டங்கள்தான் எல்லாக் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. கோபமான பிள்ளைக்கு சோறு கொஞ்சம் சீக்கிர மாகவே கிடைக்கும்!

வரலாறு இப்படிப்பட்ட போராட்டக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அடிமை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர் குறித்து யாரும் ஆராய்ச்சிகள் செய்வது இல்லை. போராடி வென்றவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களால் நூலகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்தப் போராட்டக்காரர் வரிசையில் இணைத்துக்கொள்ளவே நானும்போரா டுகிறேன். நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன. நீங்களும் வாருங்கள்!''


1 Responses (Leave a Comment):

வனம் said...

வணக்கம் காட்டாமணக்கு

மிக மிக தேவையான கருத்துக்கள்.
\\தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம்... இவைஉண்டு, தானுண்டு என்று இருப்பது சுகம்தான். ஆனால், அறம் ஆகாது.\\

நியாயம்தான், அறம் ஆகாதுதான்

ஆனால் இதற்காக தியாகு குறிப்பிடும் காரணங்களுடன் மற்றுமொரு காரணமும் இருக்கின்றது என உணருகின்றேன் அது

எப்போதும் மக்களை சிந்திக்கவிடாது ஒரு கொண்டாட்ட மனநிலையில் வைத்திருப்பது

எப்படி யெனில் இன்றைய தொலைகாட்சிகளை பார்த்தாலே தெரியும் எப்போதும் பாடல்களும், நடனங்களும் தான் பார்க்கவைக்கப்படுகின்றார்கள்

என் நண்பரொருவர் கூறுவார் அடங்க மறுப்பது என்பதே வரம்தான், அப்போழுதான் ஒருவர் சிந்திக்க தொடங்குகின்றார் என்று பொருள் என்பார் -- சரிதானே.

இராஜராஜன்